கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, June 30, 2016

ஸ்டெம் பயிற்சித் திட்டம்

மேலும் 220 பள்ளிகளில் ஸ்டெம் பயிற்சித் திட்டம் மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது.


. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில், கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான ஸ்டெம்' திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

 முதல் கட்டமாக கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் 10 அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அறிவியல் பாடத்துக்கான கருத்துருக்கள் செய்முறைப் பயிற்சிகளாக நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.

 இந்தச் செய்முறைப் பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை ஆர்எம்எஸ்ஏ மூலம் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 220 பள்ளிகளுக்கு விரிவாக்கம்:

நிகழ் கல்வியாண்டில் இந்தத் திட்டம், மேலும் 220 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

 மாணவர்களை புத்தாக்கச் சிந்தனைகளுடனும், மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் ஸ்டெம்' திட்டம் தொடங்கப்பட்டது. எளிமையான செய்முறைப் பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். 

பின்னர், இந்தப் பயிற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்ப்பதால், கடினமான அடிப்படைக் கருத்துருக்கள் எளிதில் புரியும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறையைத் தாண்டி, செயல்வழிக் கற்றலுக்கு பற்றுவிக்கப்படுகிறார்கள்.

எனவே, முக்கியப் பாடங்களான கணிதம், அறிவியல் பாடங்களுக்கு உபகரணங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் மேலும் 220 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மேம்படும் என்றனர். 

பெற்றோர் கவனத்திற்கு ! மாணவர்கள் வாட்ஸ் ஆப் .பேஸ்புக் அனுமதிக்காதீர்

மாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது

சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு தனியாக வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்த அனுமதிப்பதால் முன்பின் தெரியாத நபர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு நமது குழந்தைகளிடம் நயவஞ்சகமான முறையில் நல்லவர்களை போல தகவல்கள் பரிமாற்றம் செய்து, ஆபாச படங்களை காட்டி, அதுபோல ஜாலியாக இருக்கலாம் என்பது போன ஆசையை காட்டி, திருமண ஆசையை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிமையில் சந்திக்கலாம் என்று அழைத்து அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டியும் இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

அல்லது விபசாரத்தில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்து விடுவர். எனவே தங்கள் குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை துவக்காமல் இருப்பது நல்லது.

மேலும் பொதுமக்களும், முன்பின் தெரியாமல் வரும் நபர்களிடம் இருந்து வரும் பதிவுகளை விருப்பம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகளுக்கு இணையதள வசதியை பயன்படுத்துகின்ற வகையில் உள்ள செல்போன்களை வாங்கிதர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கல்லூரிகளில் ராக்கிங் தடுக்க உத்தரவு

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் ராக்கிங்கில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி இயக்குனரகம் உத்தரவு

கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ–மாணவிகள் ராக்கிங்கில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

1400 கல்லூரிகள் தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளை கொண்ட சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன.இந்த பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 1400 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.இடங்கள் அதிகரிப்பு இந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஏற்கனவே உள்ள படிப்புகள் போக புதிய படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களை விட கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம்.அதன் காரணமாக கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மாணவர் சேர்க்கைக்கு உரிய இடங்களைவிட விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஏராளம்.

அதன் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீத இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத இடங்களும் அதிகரிக்கப்பட்டன.அதுபோல தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்தன.

அவ்வாறு கோரிக்கை வைத்த பல கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.வகுப்புகள் தொடங்கிவிட்டன இந்த நிலையில் பிளஸ்–2 முடித்துவிட்டு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிவிட்டன.

பல கல்லூரிகளில் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரவேற்கிறார்கள். இருப்பினும் ராக்கிங் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனரகம் அனைத்து கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது 

ராக்கிங் புகார் பெட்டி கல்லூரி மாணவ–மாணவிகளிடையே ராக்கிங் (பகடிவதை) நடக்காதவாறு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியவற்றை கருத்தில் கொண்டு செயல்பட சென்ற ஆண்டு அறிவுரை வழங்கியது போல இக்கல்வி ஆண்டிலும் (2016–2017) தங்கள் கல்லூரியில் ராக்கிங் நடக்காமல் இருக்க தாங்கள் முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராக்கிங் பற்றி உடனடியாக புகார் செய்ய தேர்வாகி உள்ள ஆசிரியரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அறிவிப்பு பலகையில் வைக்கவேண்டும்.ராக்கிங் புகார் பெட்டி மற்றும் ராக்கிங் ஆலோசனை பெட்டியினை அமைத்து ராக்கிங் கொடுமையினை அறவே ஒழிக்க முன் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்களும், துறைத்தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து கடிதம் எழுதவேண்டும்.  இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல்

பத்தாம் வகுப்புத் தேர்வில்:

மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் இன்று வெளியீடு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றமுள்ளோரின் பதிவெண் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வை 10,72,225 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 9, 750 ஆகும். அதைத் தொடர்ந்து 22,356 விடைத்தாள்களில் மறுகூட்டல் செய்யப்பட்டது. இதில், மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 451 ஆகும்.

அதன்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tndge.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜூன் 30) பிற்பகல் வெளியிடப்படும்.

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவு

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

உடனடித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன. இந்த முடிவுகளை www.result.unom.ac.in www.ideunom.ac.in http:egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.

மறுமதிப்பீடு: தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 1 முதல் 8-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல்

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரும் ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 300-க்கான வங்கி வரைவோலையை இணைத்து ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 23-இல் உடனடித் தேர்வு: இளநிலைப் பட்டப் படிப்பில் 5-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெற்று, 6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 3-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, 4-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தொழில் படிப்பு மாணவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 8-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் மூன்று மையங்களில் ஜூலை 23-இல் நடத்தப்படும் மறுதேர்வுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டை ஜூலை 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Monday, June 27, 2016

இன்ஜினியரிங் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பெயர் வெளியிடப்படுமா ?

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படுமா

இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கவுன்சிலிங்கில் விருப்ப பாடங்கள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய, எளிதாக கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத பட்டியலை அண்ணா பல்கலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதேபோல, கல்லுாரிகளின் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகார அந்தஸ்து, கடந்த வாரம் வழங்கப்பட்ட நிலையில், எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெற்றன; எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெறவில்லை; எந்த கல்லுாரிகள் புதிதாக சேர்ந்தன என்பன போன்ற விவரங்களை, அண்ணா பல்கலை இதுவரை வெளியிடவில்லை.

மாறாக இணையதளத்தில், கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெற்றோரும், மாணவர்களும் ஏமாறாமல் தடுக்க, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Sunday, June 26, 2016

பொறியியல் கலந்தாய்வு இன்று

பொறியியல் மாணவர் சோ்க்கை பொதுப்பிரிவு கவுன்சலிங் இன்று தொடக்கம் அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடக்கும்

தமிழகம் முழுவதும் உள்ள 524 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 9 இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் முதல் நடைபெற்றது.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 3,812 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டது.

மொத்த தகுதியான விண்ணப்பங்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண்கள் 80 ஆயிரத்து 910 பேர், பெண்கள் 50 ஆயிரத்து 272 பேர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 69 ஆயிரத்து 575 பேர்.

இவர்களுக்கான ரேங்க் பட்டியல் கடந்த 22ம் தேதி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து 24ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 25ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 21ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதையடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக பல்கலை வளாகத்தில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளுடன் வரும் பெற்றோர் அல்லது சகோதரிக்கு பல்கலையில் தங்கி கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது.

அறுசுவை உணவின் அற்புதம்

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும்.

நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை

உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது.
இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது.
கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது.
கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது.
உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது.
உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை

இனிப்பு
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்.

எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு.

உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும். இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும்.

அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது. எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும்.

வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும். எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.

படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது. உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும். நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும்.

நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள்.

உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும். 'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

படித்ததில் பிடித்தது

தெரு கூத்துவை வளர்க்கும் துவக்கப்பள்ளி

உயிர் பெறும் தெருக்கூத்து வழக்கமான முறையில்லாமல், கதைகளுக்கு உயிரோட்டம் கொடுத்து, அந்த உலகத்துக்கே அவர்களை அழைத்து செல்லும் மகிழ்ச்சியான கற்றல் முறையை செயல்படுத்தியுள்ளது ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

எதிலும் சற்று வித்தியாசத்தை மட்டுமின்றி, ஒரு நிஜத்தை விரும்புகின்றனர் இன்றைய குழந்தைகள். சுற்றிலும் சுவர் ஓவியங்கள் என பள்ளிகளில் வசீகரமான சூழல் இருந்தாலும், அந்த உலகத்துக்கு அவர்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எப்போதுமே குழந்தைகளிடம் உண்டு.

இத்தகைய விருப்பத்தை பூர்த்தி செய்து, மகிழ்ச்சியான கற்றலை செயல் படுத்தியுள்ளது இப்பள்ளி.கல்விக்கான சூழலை உருவாக்கித்தருவதோடு கல்வித்துறையின் செயல்பாடு முடிகிறது. அச்சூழலை உயிருள்ளதாக்கி, அந்த உலகத்துக்கு குழந்தைகளை கொண்டு செல்லும் திறன் ஆசிரியர்களின் கையில் மட்டும்தான் உள்ளது.

ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 50 குழந்தைகள் படிக்கின்றனர். முகபாவனைகளால் அன்று அனைவரையும் தன் வசம் ஈர்த்த தெருக்கூத்துகள் இன்று, காணாமல் போய்விட்டன. பள்ளிக்குழந்தைகளுக்கு அக்கலையை கற்றுத்தருவதோடு, அதன் மூலம் பாடம் நடத்தும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

கற்றல் அட்டை கல்வி, தேர்வுகளை எதிர்கொள்ள உதவுகிறதே தவிர, அவர்களுக்கு பிடித்தமான கல்வியாக மாறுவது குழந்தைகளோடு குழந்தைகளாக மாறும் ஆசிரியர்களால் தான்.

இப்பள்ளியில் நுழைந்தவுடன், அழகிய பிஞ்சு முகங்கள் பலவும் நம்மை பயங்காட்டும் சிங்கம், புலியாக மாறியிருப்பதில் ஆச்சர்யமே ஏற்பட்டது. மகிழ்ச்சிகரமான கற்றல் என்ற முறையின் முதல் முயற்சியாக, விலங்குகளின் செயல்பாடுகளை, அக்குழந்தைகள் மூலமே செயல்விளக்கமளிக்கச் செய்தனர் ஆசிரியர்கள்.

அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், சினிமாக்களுக்கு அடிப்படையாக நாடகத்தை கூறி வருகிறோம். ஆனால், அதற்கும் அடிப்படையாக இருப்பது தெருக்கூத்து. நல்ல கருத்துகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க, பலரும் பயன்படுத்திய இந்தக்கலையை, இன்று பெரும்பாலானவர்கள் மறந்து விட்டனர்.

இதை பள்ளிக் குழந்தைகள் மூலம், அழியாமல் பாதுகாக்கும் செயல்தான் இம்முயற்சி. பாடங்களை, கரும்பலகைகள் மூலமே நடத்தி வரும் வழக்கமான முறையிலிருந்து விடுபட்டு, இதுபோன்ற, முகபாவனைகள் மூலம் கூத்துகளாக பாடங்களை நடத்துவதில், குழந்தைகளும் மகிழ்ச்சியடைகின்றனர்.

ஒரு உற்சாகத்தோடு பாடங்களை கவனிக்கின்றனர். தவிர, கருத்துகள், பாடங்களாக மட்டுமின்றி, ஒரு கதையாகவே அவர்கள் மனதில் பதியும் வாய்ப்பு உருவாகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து கரும்பலகையில் பாடம் படித்த காலத்தை விடவும், ஓடி ஆடி அவர்களாகவே படிக்கும் முறையே, என்றும் மனதில் பதியக்கூடியதாக இருக்கிறது, என்றனர்