"ஸ்மார்ட் குடும்ப அட்டை: ரகசியக் குறியீடு எண் 7 நாள்களுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்: ஆட்சியர் தகவல்
ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற அனுப்பப்பட்ட ரகசிய குறியீடு எண் 7 நாள்களுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் ஆதார் எண்ணை குடும்ப அட்டையில் இணைத்துக் கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் அட்டை அச்சடிக்கப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு ஓடிபி எண் (ரகசியக் குறியீடு) அனுப்பப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 1-ஆம் தேதி நள்ளிரவில் ரகசியக் குறியீடு எண் அனுப்பப்பட்டது. வரப்பெற்ற ரசகியக் குறியீடு எண் 7 நாள்களுக்கும் மட்டுமே செயல்படுத்த இயலும். எனவே, ரகசியக் குறியீட்டு எண் கிடைத்த 7 நாள்களுக்குள் பழைய குடும்ப அட்டை, குறியீட்டு எண்ணுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில் ஸ்மார்ட் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், ரகசியக் குறியீடு எண் தவறுதலாக அழிக்கப்பட்டு இருந்தால், குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணில் இருந்து இலவச சேவை அழைப்பு எண் 1967 என்ற இணைப்புக்கு தொடர்பு கொண்டால், மறு ரகசிய குறியீடு எண் வழங்கப்படும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஸ்மார்ட் அட்டை பெறுவதற்கும், ரகசியக் குறியீடு எண் அனுப்புவதற்கும், பொருள்கள் அடங்கிய விவரம் அனுப்புவதற்கும் செல்லிடப்பேசி எண்ணை அவசியம் குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும். செல்லிடப்பேசி எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்க இயலாத நிலை உள்ளதால் உடனடியாக செல்லிடப்பேசி எண்ணை நியாய விலைக்கடையில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஜுன் 1 முதல் பொருள்கள் குறைக்கப்படவுள்ளதால் உடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை நியாய விலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி முன்னுரிமை ஸ்மார்ட் அட்டையில் குடும்பத்திலுள்ள மூத்த பெண் உறுப்பினரே குடும்பத் தலைவராகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்." -
No comments:
Post a Comment