எஸ்எஸ்எல்சி கணித தேர்விற்கு கருணை மதிப்பெண் : விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவு
எஸ்எஸ்எல்சி கணித தேர்வில் குளறுபடியாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 16ம் தேதி தொடங்கி, கடந்த 20ம் தேதி நிறைவடைந்தது. இதில், மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.
நடப்பாண்டு தமிழ் முதல் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் மற்றும் கணித தேர்வுகள் கடினமாக கேட்கப்பட்டன. இதனால், மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக கணித தேர்வில், பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த புளூபிரிண்ட் முறைக்கு மாறாக, கூடுதலாக கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்பட்டன. 4 ஒரு மதிப்பெண் வினாக்கள், 5 இரண்டு மதிப்பெண் வினாக்கள், கூடுதலாக கிரியேட்டிவ் ஆக கேட்கப்பட்டிருந்தன. மேலும், ஒரு மதிப்பெண் பிரிவில் 4வது வினாவில், ‘இருபடி பல்லுறுப்பு கோவை’ என கேட்பதற்கு பதிலாக, ‘ஈருறுப்பு கோவை’ என தவறாக இடம்பெற்றிருந்து. எனவே மேற்கண்ட வினாக்களுக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தாலே, கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (24ம்தேதி) தொடங்குகிறது. முதல்நாளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், முதன்மை தேர்வர் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் ஈடுபடுகின்றனர். இதற்கென நேற்று கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டன.
அவற்றில், கணித தேர்வில் 4வது ஒரு மதிப்பெண் வினாவிற்கு மட்டும், முயற்சி செய்திருந்தால் கருணை மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற எந்த கேள்விக்கும், கருணை மதிப்பெண் வழங்கப்படவில்லை.
No comments:
Post a Comment