கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, August 28, 2016

யானை வாலால் மன்னனுக்கு வந்த சோதனை

ஓஷோவின் கதை

அவன் ஒரு பிச்சைக் காரனின் மகன். இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பான்.

அவன் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தான் என்றால், அரசனின் யானை வீதியில் செல்லும் போது, அவனால் அதன் வாலைப் பிடித்து அந்த யானையை நகர விடாமல் செய்ய முடியும்.

சில சமயங்களில் அரசனுக்கே தர்ம சங்கடமாகி விடும். ஏனெனில் அவர் யானை மீது உட்கார்ந்து கொண்டிருப்பார், மந்தை முழுவதும் மக்கள் கூடி நின்று இக்காட்சியைப் பார்த்து சிரிப்பார்கள். எல்லாம் இந்த பிச்சைக்காரனின் மகனால் விளைவது.

அரசர் தன் மந்திரியை அழைத்தார்.

"ஏதாவதுசெய்தே ஆகவேண்டும். இது எனக்கு பெரிய அவமானம். கிராமத்தின் வழியாக செல்வதற்கே நான் பயப்பட வேண்டியிருக்கிறது. அந்த பையன் சில சமயங்களில் வேறு கிராமங்களுக்கும் வந்து விடுகிறான்! எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவன் யானையின் வாலைப் பிடித்து விடுகிறான், அதுவும் நகராமல் நின்று விடுகிறது. அந்தப் பையன் அதிக சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் சக்தியை நீக்க ஏதாவது செய்தாக வேண்டும்".

மந்திரி கூறினார்:
"நான் சென்று அறிவாளிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில், அவன் சக்தியை எப்படி நீக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அவன் ஒரு பிச்சைக்காரன். அவன் கடை வைத்திருப்பவன் என்றால், அது அவன் சக்தியை உறிஞ்சி விடும். தொடக்கப் பள்ளீயில் அவன் ஒரு ஆசிரியராக இருந்தான் என்றால், அப்பொழுதும் அவன் சக்தி நீக்கப்பட்டு விடும்.

ஒரு அலுவலகத்தில் அவன் வேலை செய்தான் என்றாலும், அவன் சக்தி குறைந்து விடும். ஆனால் அவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை, அவன் வேடிக்கைக்காக வாழ்கிறான், மக்கள் அவனை விரும்புகிறார்கள், அவனுக்கு உணவிடுகிறார்கள்... அதனால் அவனுக்கு உணவிற்கும் பஞ்சமில்லை. அவன் மகிழ்ச்சியாய் இருக்கிறான். சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான். அதனால், இது மிகவும் கடினம்.

ஆனாலும் நான்ஆலோசனை கேட்கச் செல்கிறேன். ஒரு வயதான அறிவாளியிடம் சென்றார்.

அவர் கூறினார்:
"ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனிடம் சென்று நீங்கள் அவனுக்குத் தினமும் ஒரு தங்கக் காசு கொடுப்பதாகவும், அதற்காக அவன் ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள் - உண்மையிலேயே, அது சிறிய வேலைதான். அவன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் அவனுக்கு தினமும் ஒரு தங்கக்காசு தருவீர்கள்.

மந்திரி கேட்டார்: "ஆனால் இது எப்படி உதவும்? இது அவனை இன்னும் அதிக சக்தி படைத்தவனாக வேண்டுமானால் மாற்றலாம். ஒரு பணம் கிடைத்தவுடன் அவன் இன்னும் அதிகமாக சாப்பிடுவான். பிச்சை எடுப்பதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டான்."

அந்த அறிவாளி கூறினார்: "கவலைப்படாதீர்கள், நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்." அவ்வாறே செய்யப் பட்டது.

அடுத்த வாரம், அரசர் கடந்து செல்லும் போது, அந்த பையன் யானையை நிறுத்த முயற்சித்து தோல்வியடைந்தான். அதனுடன் இழுத்துச் செல்லப்பட்டான்.

என்ன நடந்தது? அவன் கவனம் கலைந்து விட்டது . கவலை நுழைந்துவிட்டது. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும், கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பதை, அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அது கவலையாக மாறி, அவன் முழு இருத்தலைப் பிரித்து விடுகிறது. தூங்கும் போது கூட அது மாலை என்பதைப் போல் கனவு காண தொடங்கி விடுகிறான். கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு, தன் ரூபாயைப் பெற்றுக் கொள்கிறான் அவன். பிறகு அந்தத் தங்க ரூபாய்களைச் சேகரிக்கத் தொடங்கி விடுகிறான். ஏழு வைத்திருந்தான், இப்போது எட்டு, பிறகு இவ்வளவு நாட்களுக்குள் நூறு ரூபாய்களை பெற்றுவிட முடியும் என்ற கணக்குப் போட துவங்கி விடுவான். பிறகு, அது இருநூறாகும்.

கணக்கு வந்தவுடன் அங்கு வேடிக்கை மறந்து விடுகிறது. அதுவும் அவன் செய்ய வேண்டியது மிகச்சிறிய வேலைதான், விளக்கேற்ற வேண்டும். ஒரு நிமிட வேலைதான், அவ்வளவு கூட இல்லை, ஒரு கணத்தில் செய்து விடக் கூடியது. ஆனால் அது கவலையாகி விட்டது. அது அவனது சக்தியை எல்லாம் நீக்கிவிட்டது.

இப்படி தான் சமுதாயம் முழுவதும் உங்கள் சக்தியை உறிஞ்சி விடுகின்றன . உங்களை முழு இருத்தலோடு வாழ விடுவதில்லை .. தளர்வோடு வாழ விடுவதில்லை .. உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய விடுவதில்லை . ஒரு நாள் நீங்கள் வேலைக்கு போகாமல் இயல்பாக உங்கள் விருப்பம் போல், ஒரு நாள் கூட இருக்க இந்த சமுதாயம் இருக்க விடாது .

ஏன் என்றால், நீ இயல்பாக இருந்தால் நீ பலம் பெற்று விடுவாய் . சுய பலம் பெற்று விடுவாய் . சந்தோஷ மனிதனாக மாறிவிடுவாய் பிறகு எந்த சமுதாயத்தையும் , எந்த பூசாரியையும் நம்பி இருக்க மாட்டாய் .

விளையாட்டாக வாழ். விருப்பட்டதை செய் .. வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் ..

No comments:

Post a Comment