கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, December 30, 2016

மகான் கொடுத்த பிச்சை ஓடும் அதன் மகத்துவமும்

பிச்சை ஓடுஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார். கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான். எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா.... ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க, பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார். பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க...

கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை. பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு! கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட... அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர் வேதனையுடன் சொன்னார்! அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என சொல்கிறார்.

இதே போலத்தான்... நாமும் நமக்குள் இருக்கும்... ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- யின் மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

(படித்ததில் பிடித்தது)

No comments:

Post a Comment