கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, August 19, 2017

பிளஸ் 1 தேர்வில் பாஸ் மார்க் எவ்வளவு ?

"பிளஸ் 1: மதிப்பெண் முறையில் புதிய மாற்றங்கள் : அரசு உத்தரவு வெளியீடு

பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண் 600 -ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், அந்த மதிப்பெண்கள் எந்த முறையில் வழங்கப்பட உள்ளன என்பதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்:

பிளஸ் 1 வகுப்புக்கு மாநில அளவில் பொதுத் தேர்வு நடத்துவதற்கான மதிப்பீட்டு முறை, வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளில், மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும். மேலும், இரு தாள்களிலும் சேர்த்து எழுத்துத் தேர்வில் சராசரியாக கணக்கிடப்படும் 100 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன், இருதாள்களையும் சேர்த்து எழுத்துத் தேர்வின் சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

செய்முறை -தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சிப் பெற...

செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும், செய்முறை வகுப்புகளில் பங்கேற்று செய்முறை பொதுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, அகமதிப்பீடு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றில் மொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப் பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன், அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்கல்வி செய்முறை பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு தொழிற்கல்வி செய்முறை புறத் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன், அகமதிப்பீடு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றில் ஒட்டு மொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி வகுப்புகள்:

ஒவ்வொரு வாரமும் உரிய செய்முறை பாடத்துக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் அதனை முறையாகக் கண்காணிக்க வேண்டும். செய்முறைப் பாடவேளையில் மாணவர்களின் கருவிகளை கையாளுதல், விவரித்தல், பதிவு செய்தல் உள்ளிட்ட திறன்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

தேர்ச்சி பெறுவதற்கு செய்முறைப் புறத் தேர்வில் கட்டாயமாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.

செய்முறை புறத் தேர்வுக்கான மதிப்பெண்கள் அளிக்கப்படும் முறை

செய்முறைப் பதிவேடு 3 மதிப்பெண்கள், திறன் மதிப்பீடு 2 மதிப்பெண்கள், செய்முறைப் புறத் தேர்வு 15 மதிப்பெண்கள் என மொத்தம் 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். தொழிற்கல்விப் பாடச் செய்முறைப் புறத் தேர்வில், செய்முறைப் பதிவேட்டிற்கு 20 மதிப்பெண்களும், செய்முறை வகுப்புகளில் பங்கேற்பு, கருவிகளை கையாளுதல் ஆகியவற்றுக்கு 5 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் என மொத்தம் 75 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

செய்முறைத் தேர்வு இல்லாத..

பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் எழுத்துத் தேர்வுக்கு செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில் 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப் பாடங்கள் மற்றும் தொழிற் கல்வி பாடங்களின் எழுத்துத் தேர்வுக்கு 90 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மொழிப் பாடங்களில் எழுத்துத் தேர்வுக்கான இரு தாள்களும், ஒவ்வொரு தாளுக்கும் 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களின் தொடர் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு பாடத்திலும் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக அளிக்கப்படும். மேலும் தொழிற்கல்வி பாடங்களில் செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களாக வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகைப் பதிவுக்கும் மதிப்பெண்

பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களின் வருகைப் பதிவுக்கும் மதிப்பெண் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடர்ச்சியான கற்றலுக்கு மாணவர்களின் வருகைப்பதிவு முக்கியமானதாகும். இதைக் கருத்தில் கொண்டு, தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு இல்லாத பாடத்துக்கு அகமதிப்பீடு மதிப்பெண்ணாக 10 மதிப்பெண்கள் வழங்கலாம். அவற்றில் மாணவர்கள் வருகைப் பதிவுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள், 80 -85 சதவீதம் வரை வருகைப் புரிந்தவருக்கு 2 மதிப்பெண்களும், 75 - 80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 1 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்நிலைத்தேர்வில் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல் திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும். தொழிற்கல்வி செய்முறைப் பாடத்துக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் அதிகபட்சம் 25 வழங்கலாம். அவற்றில் மாணவர்கள் வருகைப்பதிவுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகைப் புரிந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள், 80 - 85 சதவீதம் வரை வருகை புரிந்தவருக்கு 4 மதிப்பெண்களும், 75 -80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

உள்நிலைத் தேர்வில் அதிகப்பட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 15 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகப்பட்சமாக 5 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும். வினாத்தாள் வடிவமைப்பு: வினாத்தாள் வடிவமைப்பினைப் பொருத்தவரையில், உயிரியல் பாடத்தில் (தாவரவியல், விலங்கியல்) ஆகிய 2 பாடத்துக்கு தலா 35 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 8, இரு மதிப்பெண் வினாக்கள் 4, மூன்று மதிப்பெண் வினாக்கள் 3, ஐந்து மதிப்பெண் வினாக்கள் 2 என கேட்கப்பட வேண்டும். வினாத்தாள் வடிவமைப்பு தொழிற்கல்விக்கு ஒரு மதிப்பெண்ணில் 15-ம், மூன்று குறுவினாக்கள் மதிப்பெண்ணில் 10-ம், சிறுவினாக்கள் 5 மதிப்பெண்ணுக்கு 5-ம், பெருவினாக்கள் 10 மதிப்பெண்ணுக்கு 2-ம் என 90 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட உள்ளது.

செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்வியும் என 90 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெறும். செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 15 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 5 கேள்விகளும் என 70 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம் பெறும்.

கற்றலின் நோக்களை மதிப்பெண்களாக அறிந்து கொள்வதற்கு 30 சதவீதமும், புரிந்து கொள்வதற்காக 40 சதவீதமும், பயன்படுத்துதல் 20 சதவீதமும், திறனடைதல், படைப்பாற்றல் 10 சதவீதமும் அளிக்கப்படும். ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் என ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் வடிவமைக்கப்படும்போது கற்றல் நோக்கங்களுக்காக ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் இடம் பெறும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்."

No comments:

Post a Comment