15,621 பேருக்கு பணி ஆணை: 6 ஆயிரம் போலீஸார் விரைவில் நியமனம் - முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு ********************
தமிழகத்தில் 6 ஆயிரம் போலீ ஸார் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட காவல், சிறை, தீயணைப்புத் துறை வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
ஆயுதப் படைக்கு 6,004 ஆண், 2,564 பெண் 2-ம் நிலை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கு 4,567 ஆண், 5 பெண் 2-ம் நிலைக்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறைத் துறைக்கு 954 ஆண், 36 பெண் 2-ம் நிலை வார்டர்கள், தீயணைப்புத் துறையில் 1,491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 15,621 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் திருநங்கைகள். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:
பட்ஜெட் கூட்டத் தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து அறிவித்த மிக குறுகிய காலத்தில் 15,621 பேர் பல்வேறு சீருடை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 4 திருநங்கைகள் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக காவல்துறையில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் காவல்துறையில் காலிப் பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
தற்போது தமிழக காவல்துறையில் 3-ல் ஒரு பங்கு பெண் காவலர்கள் உள்ளனர். இதனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்
No comments:
Post a Comment