தொல் பழங்கால வரலாற்று தந்தையின் புத்தகம் அவரது கல்லறையில் வெளியிடல்
இந்திய தொல் பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் குறித்த புத்தகம், அவரது கல்லறையில், நேற்று வெளியிடப்பட்டது.
அறிவியல் எழுத்தாளர், ஏற்காடு இளங்கோ எழுதிய, இந்திய தொல் பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் எனும் புத்தகத்தை, ஹோலி டிரினிட்டி சர்ச் பென்னட் வால்டர் வெளியிட, ஏற்காடு மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் சூசை அலங்காரம் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, ஏற்காட்டில் உள்ள, அவரது கல்லறையில் பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து, இளங்கோ கூறியதாவது:
ராபர்ட் புரூஸ் பூட், 1863 மே, 30ல், சென்னை, பல்லாவரத்தில் உள்ள திரிசூலம் மலையில், கல்கோடாரி ஒன்றை கண்டுபிடித்தார். அதே ஆண்டு, செப்டம்பரில், அத்திரபாக்கம் கொற்றலை ஆற்றுப்படுகையில், முதுமக்கள் தாழி, பானை, கற்கால வெட்டு கற்கருவிகளை கண்டுபிடித்தார்.
அவை, 15 லட்சம் ஆண்டு பழமையானது.
இவரது அரிய கண்டுபிடிப்பால், பழங்கால மனித இன வாழ்க்கை, இந்திய துணை கண்டத்தில் இருந்தது தெரியவந்தது. 1884ல், 3.5 கி.மீ., நீளமுள்ள, பெலும் குகையை கண்டுபிடித்தார். இது, இந்தியாவில் இரண்டாவது நீளமான குகை.
இவரது கண்டுபிடிப்புகளை, சென்னை அருங்காட்சியகம், காட்சிக்கு வைத்துள்ளது. பூட், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள, ஐவி காட்டேஜில் வாழ்ந்தார். 1912 டிச., 29ல், கோல்கட்டாவில் இறந்தார். இவரது கல்லறை, ஏற்காடு ஹோலி டிரினிட்டி சர்ச் வளாகத்தில் உள்ளது.
அதனால், இவர் குறித்த புத்தகத்தை, இவரது, 105ம் ஆண்டு நினைவு நாளில், இவரது கல்லறையிலேயே வெளியிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment