1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது
தமிழகத்தில் மாநில பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆனதால் சி.பி.எஸ்.இ.க்கு இணையாகவும், வேலைவாய்ப்பு, புதிய தொழில்நுட்பம் ஆகிய வசதிகளுடன் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது.
புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி வெளியிட்டார். அதனை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக நிர்வாக இயக்குனர் டி.ஜெகன்நாதனிடம் ஒப்படைத்தார்.அதன்படி 1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய திட்டப்படியான பாடப்புத்தகங்களும், மற்ற வகுப்புகளுக்கு பழைய திட்டப்படியான புத்தகங்களும் அச்சிடும் பணி தொடங்கி உள்ளது.
இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள் 7 மொழிகளிலும், 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் அச்சடிக்கப்படுகின்றன.
ஏப்ரல் மாதத்திற்குள் தேவையான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் முன்கூட்டியே பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிடும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment