முதல் வழக்கில் வெற்றி முதல் வழக்கில் வெற்றி
ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் அதிகாரிகளிடம் நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா? என்று கேட்டார்.
பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்! என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார்.
பீர்பால் மட்டும் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது எனக் கூற இயலாது என்றார்.
அச்சமயத்தில் வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள் என்றான்.
அக்பர், அவர்களை வரச்சொல் என்றார். ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர்.
பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான். நான் ஒரு சட்ட நிபுணன். இவன் என் மாணவன் பிரமோத் . இவன் மீது தான் நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன். இவன் என்னிடம் மாணவனாக சேரும்போது, எனக்கு மாதம் மூன்று பொற்காசு குரு தட்சிணை தர வேண்டும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்று கூறினேன். இவன் தான் ஒரு பரம ஏழை, ஆதலால் படிப்பு முடித்து வழக்கறிஞனாகி எடுத்து வாதிடும் முதல் வழக்கில் வெற்றி பெற்று, பிறகு ஒட்டு மொத்தமாக முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாக எனக்கு வாக்களித்தான். அவன் அளித்த வாக்கை நம்பி ஓராண்டு காலம் இவனுக்கு கற்பித்தேன்.
சரி, இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா? என்று அக்பர் கேட்டார்.
இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான்.
உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்? என்று கேட்டார்.
பிரபு! என் சித்தப்பா இறக்கும் முன் அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துக்களுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார்.
இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை, என்றான்.
அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது? என்று கேட்டார் அக்பர்.
நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும் என்றான்.
உடனே நீதிபதி கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான். அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு! என்றார்.
இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.
ஆனால் பீர்பால் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பாலிடம் கூறினார்.
புத்திசாலியான பீர்பால் சரியான தீர்ப்பு வழங்குவார் எனக் கிழவர் உறுதியாக நம்பினார். பீர்பாலும், சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது என்றார்.
உடனே செய்வதறியாது அந்த கிழவர், பீர்பாலையும், அக்பரையும் வணங்கிவிட்டு தள்ளாடித் தள்ளாடி வெளியேற முற்பட்டார்.
இளைஞன் பிரமோத் வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேற முற்படும்பொழுது, திடீரென பீர்பால் பிரமோத்தை அழைத்து, பீர்பால், உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய் அல்லவா என்று கேட்டார்.
ஆம் ஐயா! என்றான். அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு! என்றார்.
சபையில் இருந்த அனைவரும் பீர்பால் கூறிய தீர்ப்பைக் கேட்டு கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பரும் மனம் மகிழ்ந்து பீர்பலை தழுவிக் கொண்டார்.
No comments:
Post a Comment