கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, October 16, 2016

மாட்டிற்கு சூடு போட்ட கதை

ஒரு நாள் குருவும் சீடர்களும், அங்கிருந்தவர்களின் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு வந்தனர். மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. செடிகள் நன்றாக தளதள என்று வளர்ந்து இருந்தன.

ஒருநாள் காலையில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டது. அதை பார்த்த மட்டி, ஐயோ! போச்சு! போச்சு! என்று கத்தினான்.

பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்தைப் பார்த்து, அடடா! நாம் கஷ்டப்பட்டு வளர்த்து வந்த செடி இப்படிப் பாழாகி விட்டதே என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர்.

செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் ஒரு யோசனை சொல்லும்படி சீடர்களை கேட்டார். குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே! என்றான் முட்டாள்.

மாட்டுக்கு தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விடலாம்! என்றான் மூடன்.

புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தால் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே! என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.

தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்! என்றான் மண்டு.

இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார்.

தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்! என்று சொன்னான் மட்டி சரி! என்று, ஒரு பாத்திச் செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.

வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன. குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டலாம் என்றான் மடையன்.

மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர். சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.

குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி வைத்து தினமும் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினான் மடையன்.

இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் வேறொரு பசுமாடு வந்தது. மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்! என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள்.

பொழுது விடிந்தது அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடி வந்தான். பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான். டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், கட்டியதற்க்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்! என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான்.

கீரையும் வேண்டாம், பணமும் வேண்டாம் ஆளை விட்டால் போதும் என்று குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள்.

நீதி : முட்டாள்தனமான யோசனை ஆபத்தில் தான் முடியும்.

No comments:

Post a Comment