இன்று காவலர் எழுத்துத் தேர்வு: 3.20 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 11) நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை, 3.20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழக காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5538 இரண்டாம் நிலை காவலர் பணியிடத்துக்கும், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடத்துக்கும், தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடத்துக்கும், 46 பின்னடைவு பணியிடத்துக்கும் சேர்த்து மொத்தம் 6140 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற போவதாக, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது.
இந்தத் தேர்வை எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் இருந்து 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். மேலும், 19 திருநங்கைகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, மார்ச் 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இன்று நடைபெறவுள்ளது.
இதற்காக 32 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கு, சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முக்கியமாக விடைத்தாளில் பார்கோடு இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் 20 பேருக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுகிறார். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரை நடைபெறுகிறது.தேர்வு கூடத்துக்கு 9 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு எளிதாக வருவதற்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
80 மதிப்பெண்கள்:
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வில் பொது அறிவுப் பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபரே, உடல் திறன் போட்டி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்.
உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டு ஆகிய சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் 28 மதிப்பெண்கள் பெற்றாலும், தேர்ச்சி பெறும் அனைவரும் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்புவாரி விகிதாசாரப்படி 1:5 விண்ணப்பதாரர்கள் மட்டும் அடுத்தக் கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடல் திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment