கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, June 18, 2018

மனதை உலுக்கிய உண்மைச் சம்பவம்

மனதை உலுக்கிய உண்மைச் சம்பவம்.


நான் எப்போதுமே சாதாரண மக்களுடன் இயல்பாக பழகும் குணம் உடையவன்.

தினமும் அலுவலகம் செல்லும் வழியில், ஒரு பெரியவர்  வெய்யிலிலும் மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்... 

நேன்று மாலை 
குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று, அவரிடம் ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை குடுங்கய்யா என்றேன்.

அவர் 80 ருபாய் என்றார். பணக்கார கடைகளில் பேரம் பேசாமல், ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம். அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு... 

அதனால் நான் என்னங்கைய்யா ஒரு  குழந்தை பொம்மை 80 ரூபாயா 70 ரூபாய்க்கு குடுங்க என்றேன். அவர் என் கண்களை உற்றுப் பார்த்து, இதை குழந்தைகளுக்கா வாங்கறீங்க? என்றார்.

நான் ஆமாம் என்றேன்.. அவர் கொஞ்சம் மெதுவான குரலில்,
சரி குடுங்க என்றார்.

அவர் கண்களில் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன்.. அது மனதை என்னவோ செய்ய.... ஏன் அய்யா என்னாச்சு? ஏன் அழறீங்க? ன்னு கேட்டேன்.
ஒன்னுமில்ல சார் என்றார். நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்கவும், அவர் மெதுவாக  சொல்ல ஆரம்பித்தார். 

ஆவுடையப்பன் (77)  பார்வதி (73 )
தம்பதிகளுக்கு 6 குழந்தைகள்.
மிகவும் ஏழ்மையான குடும்பம்.

ஆவுடையப்பன் சொல்கிறார்; மிகவும்
கஷ்டமான நிலையில் பிள்ளைகளை
வளர்த்தேன். பலநாட்கள்
நானும் மனைவியும் சாப்பிடுவது கூட 
இல்லை. இருப்பதை பிள்ளைகளுக்கு
கொடுத்துவிடுவோம்.

பலநாள் இரவுபட்டினி இருந்திருக்கிறோம்.
ஒருநாள்கூட மனைவி இதற்காக
என்னோடு சண்டை போட்டதில்லை.

பிள்ளைகள் எல்லாம் திருமணம்
முடித்து சென்றுவிட்டனர். 
தடுமாறும் வயது எங்களுக்கு. ஆதலால் பெற்ற மக்களின்
வீட்டில் போய் இருக்கலாம் என்ற
எண்ணத்தில், மூத்த மகனிடம்
சொன்னேன்.

அதற்கு
அவன் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் வைத்து பராமரிக்க  முடியாது, யாரவது  ஒருவர்
வரலாம் என்றான்... அப்படி நான் மூத்த மகன்
வீட்டிற்கும், மனைவி வேறுஒருமகன்
வீட்டிற்கும் சென்றோம்.

47 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்து தனிமையில், பலநாட்கள் அழுதிருக்கிறேன்.

மனைவியின் நினைவுகள் எப்போதும். இரண்டு வார்த்தை கூட பேச முடியாமல் அழுதிருக்கிறேன். இறுதியில் என்மனைவி இருக்கும் ஊருக்கு
சென்றேன்.

என்
மனைவியிடம் சொன்னேன்...
நாம் வேறு எங்காவது போய் விடலாமா? என்றேன். மனைவியும் அழுது கொண்டே  சம்மதித்தாள்.
நாங்கள்
பெற்று
வளர்த்து
ஆளாக்கிய பிள்ளைகளை விட்டு வெளியே வந்து ஒருவருடமாகிறது.



நான் குழந்தைகளின் பொம்மைகள்
நடந்து விற்கிறேன் தினமும் 80 ரூபாய் முதல் 100 வரைகிடைக்கும். வயது 77 ஆகிறது. எப்போது வேண்டுமானாலும் நான் இறந்து போகலாம்.
ஏன்?
நான் நடந்துகொண்டிருக்கும் போதே கூட மரணம் வரலாம்.

அதனால்
அந்த 100 ரூபாயில் கொஞ்சம் மிச்சம்
பிடித்து சேமிக்கிறேன். அது எங்கள்  மரணசெலவிற்கு. என் பிள்ளைகளுக்கு அந்த செலவு கூட வேண்டாம் என்று அதை மனைவியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன்.  

ஒருநாள் இந்தபணம் எதற்கு சேமிக்கிறீர்கள்? என்று என்மனைவி
கேட்டாள்..... நம் மரணசெலவிற்கு
என்றேன். சத்தமாக கத்தி அழுது விட்டாள்.

இப்போது என்மனைவியின் பிரார்த்தனை...... என் கணவர் மரணிக்கும் அதே நேரத்தில்
எனக்கும் மரணத்தை கொடு...சாமி என்று அடிக்கடி சொல்கிறாள்.

என் பிரார்த்தனையும் அதுவே தான் என்று அவர் சொல்லவும்,

இதை  கேட்டுக்கொண்டிருந்த நான் மனதால் நொறுங்கிப் போனேன்.

நீங்கள் இங்கே இருப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தெரியுமா? என்றேன்.....

அவர் தெரியாது என்றார்... எனக்கு மனம் கனத்துப் போனது... 

நாம் நாகரிகமான உலகில் தான் வாழ்கிறோமா?

சாதாரண மக்களிடம் தான் எத்தனை எத்தனை வலிகள் புதைந்திருக்கின்றன.

இப்போதெல்லாம் தெருவில், சிறு வணிகர்களிடம் பேரம் பேசுவதே இல்லை.

No comments:

Post a Comment